
சென்னை: இயக்குநர் மீது ஆபாசப் புகார் கூறியதால் விளம்பரப்படத்திலிருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். சினிமாவில் துணை நடிகையான பாக்யஸ்ரீ உயிருக்கு உயிராக, நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் சில தினங்களுக்கு முன் நடித்தார். இந்த படத்தில் பாக்யஸ்ரீயை வைத்து ஆபாச காட்சிகளை எடுத்ததாக அவரது தாய் நிர்மலா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். தாம்பத்திய உறவு சம்பந்தமான மாத்திரை அடங்கிய கவர்ச்சி படம் பொறித்த அட்டை பெட்டியை என் மகள் கையில் கொடுத்து படுக்கை அறைக்குள் அனுப்புவது போல் ஆபாசமாக காட்சிகளை எடுத்ததாகவும் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டார். இதனை தயாரிப்பாளர் ரவிதேவன் மறுத்தார். ஆபாச காட்சிகளை படமாக்கவில்லை என்றும் மும்பை நிறுவனம் ஒன்றுக்காக இந்த படத்தை எடுத்ததாகவும் படுக்கை அறைக்கு டம்ளரில் பால் கொண்டு செல்வதற்கு பதில் அந்த நிறுவனம் தயாரித்த மாத்திரைகளை எடுத்து செல்வது போல் காட்சிகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். அந்த மாத்திரையின் அட்டையைப் பார்த்து ஆபாசம் என்று புகார் தந்திருப்பதாக விளக்கினார். போலீசாரிடமும் இந்தப் படத்தை திரையிட்டு காட்டினார். இந்த நிலையில் விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். அவர் நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டன. பாக்யஸ்ரீக்கு பதில் வேறு நடிகையை வைத்து படப்பிடிப்பு நடத்தப் போவதாக ரவிதேவன் அறிவித்துள்ளார். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.