விருது பெறும்படியான படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை என நடிகை லட்சுமிமேனன் தெரிவித்தார்.
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதம், அலங்கார ரதம், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவு நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடத்தினர். இதில் திரைப்பட இயக்குநர் கஜேந்திரன், நடிகை லட்சுமி மேனன், நடிகர் மூணாறு சுப்பிரமணி உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.
விழாவில், பங்கேற்பதற்காக வந்த நடிகை லட்சுமி மேனன் அளித்த பேட்டி: மலையாள படத்தில் நடித்தாலும், அதிகமாக நடித்துவருவது தமிழ் படங்களில்தான். விஷாலுடன் நடித்த "நான் சிகப்பு மனிதன்', சித்தார்த்துடன் நடித்த "ஜிகர்தண்டா', விமலுடன் நடித்த "மஞ்சப்பை', கவுதம் கார்த்தியுடன் நடித்த "சிப்பாய்' ஆகிய படங்கள் விரைவில் வரவுள்ளன. புதிய படங்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வழங்கும் 2 படங்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.
படங்களில் நடிப்பவர்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகவும் நேசிக்கின்றனர். கிராமங்களுக்கு படப்பிடிப்புக்கு சென்றால் பாசம், அன்பு அதிகமாகக் காட்டுகின்றனர்.
சுவாமி அருளால் நிறையப்படங்களில் நடித்துவிட்டேன். ஆகையால், இந்த முறை பழனியில் வந்து தங்கத்தேர் இழுத்தேன். முருகர் மிகவும் இஷ்ட தெய்வம். ஹிந்தி படங்களில் நடிக்க எந்த வாய்ப்பும் வரவில்லை. நடிப்பு என்பது, திரையரங்குக்கு வருபவர்களை ரசிக்க வைக்கவே. அதைத் தவிர, விருது பெறும்படியான படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. தற்போது 12ஆம் வகுப்பு செல்லவுள்ளேன். நடிப்பு நேரம் தவிர, மீதி நேரத்தில் தோழியருடன் பள்ளிக்குச் செல்கிறேன் எனத் தெரிவித்தார்.
