
விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படம் ‘துப்பாக்கி’. இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் விஜய் நடித்த படங்களில் அது பிரமாண்ட படைப்பாகவும் இருந்ததால் முருகதாஸ் மீது விஜய்க்கு தனி மரியாதையும் ஏற்பட்டது.
அதனால் ‘துப்பாக்கி’யைத் தொடர்ந்து ‘தலைவா’, ‘ஜில்லா’ படங்களில் பிசியாக இருந்த விஜய், முருகதாசுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருந்தார். இரண்டு படங்களும் முடிந்த பிறகு முருகதாசுடன் இணைவது என முடிவு செய்திருந்தார். இரண்டு படங்களும் திரைக்கு வந்துவிட்டதால் தற்போது முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இருவரின் கூட்டணியில் புதிய படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது. இதுவரை பெயரிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது ‘கத்தி’ என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
துப்பாக்கி படத்தின் வெற்றியை ருசித்த இந்த கூட்டணி கத்தியை வெற்றிப்படமாக்க தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.