விஜய் சேதுபதி நடிப்பில் புதிதாக உருவாகி வரும் புதிய படம் 'மெல்லிசை'. இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' மற்றும் 'ரம்மி' ஆகிய படங்களில் நடித்த காயத்ரியே நடிக்கிறார். படத்தை இயக்குபவர் ரஞ்சித். இவர் இயக்குனர் ராமிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 'பீட்சா' போல இந்தப் படமும் ஒரு திரில்லர் படம்.
இப்படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, "நவீனமயமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலைச் சொல்லும் கதை இது. இந்த நகரத்தை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். இங்கு எல்லோரும் சுவாரஸ்யமாக வாழ்கிறோம். ஆனால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்கிறோமா' என்பது தான் இந்த கதையின் கரு.
மெல்லிசை என்பது மேலும் மேலும் கேட்க தூண்டும் சுகமான இசை வடிவம், மேலும் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்பந்தபட்டவர்கள். அதுவே 'மெல்லிசை'. இசைக்கும், நவீன கதை அமைப்புக்கும் களமாக அமையும் 'மெல்லிசை' படத்திற்கு சாம் C .S என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
விஜய் சேதுபதி இந்த கதையை எதேச்சையாக கேட்ட மாத்திரத்தில் கால்ஷீட் தர ஒப்பு கொண்ட பின், நான் பேசியது ஒளிப்பதிவாளர் தினேஷிடம் தான், அவர் கொடுத்த நம்பிக்கையும் அதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் காட்டிய வேகமும் பிரமாதம். இப்போதுதான் கதை சொன்ன மாதிரி இருக்கிறது, இதோ படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது .
கதாசிரியனைப் போலவே கதையை பற்றி தெளிவாக தெரிந்து வைத்து இருக்கும் நாயகன் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக காயத்ரி நடித்து உள்ளார் . இந்த கதாபாத்திரத்துக்கு வேறு எவரையும் சிந்திக்க விடாமல் செய்து இருக்கிறார். 'மெல்லிசை' நிச்சயம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் படமாக இருக்கும்” என்று கூறினார்.
