பூ, களவாணி போன்ற படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் எஸ்.எஸ்.குமரன். இவர் இயக்குனராகி இயக்கி இருக்கும் இரண்டாவது படம் கேரள நாட்டிளம் பெண்களுடனே. இன்று (மார்ச் 21) இந்தப் படம் ரிலீஸ். அதோடு படத்தின் ஹீரோ அபி மற்றும் ஹீரோயின் காயத்ரியின் காதல் செய்தியும் ரிலீசானது.
மலையாளப் பெண்ணை காதலித்து தோல்வி அடைந்த ஞானசம்பந்தனுக்கு தன் மகனுக்கு ஒரு மலையாளப் பெண்ணையே திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இதற்காக மகனை கேரள பாரம்பரியபடி வளர்க்கிறார். பெயரைக்கூட உன்னி கிருஷ்ணன் என்று வைக்கிறார். மலையாள பெண்களை பற்றி புகழ்ந்து வளர்க்கிறார். மகன் வாலிப வயதை அடைந்ததும் கேரளாவில் உள்ள திருமண தகவல் மையத்துக்கு அனுப்பி வைத்து பெண் தேடி வரச்சொல்கிறார். போன இடத்தில் அவர் காயத்திரியை சந்தித்து காதல் கொண்டு கல்யாணம் வரைக்கும் போகிறார். அதன்பிறகு ஒரு டுவிஸ்ட்டு வரும் இதுதான் படத்தின் கதை.
இந்த கதைபோலவே நிஜத்திலும் நடந்து விட்டது. படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் அபி. மதுரைக்காரர் அவருக்கு இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் கதை சொல்லும்போதே அபிக்கும் தானும் ஒரு மலையாளப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டதாம். திருவனந்தபுரத்தில் முதல் காட்சி எடுத்தபோதுதான் ஹீரோயின் காயத்ரியை அவர் முதன் முதலில் சந்தித்தாராம். முதல் நாள் ஷூட்டிங்கிலேயே இருவருக்கும் காதல் வந்து விட்டதாம். ஒரு மாதம் வரை நடந்த ஷூட்டிங்கில் காதல் செடிக்கு உரம் போட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்தார்களாம். இப்போது திருமணத்துக்கு இருவரும் ரெடி ஆனால்... என்ன ஆனால் என்பது பற்றி அபி இப்படிக் கூறுகிறார்.
"எங்க காதலுக்கு ரெண்டு பேர் வீட்டுலேயும் இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கல. காயத்ரி பெரிய நடிகையா வரணும் இப்பவே காதல் கல்யாணம்னு போகாதேன்னு சொல்றாங்க. எங்க வீட்டுலேயும் நான் பெரிய நடிகனா வரணும்னு சொல்றாங்க. இரண்டு குடும்பத்தையும் சமாதானப்படுத்த ட்ரை பண்ணிக்கிட்டிருக்கோம். அவுங்க சம்மதிச்சாலும் சில வருஷத்துக்கு பிறகுதான் கல்யாணம் பண்ணிக்குவோம். அதுவரைக்கும் சினிமால நடிப்போம். இப்போ ரெண்டு பேருக்கு அடுத்த படம் கமிட்டாயிருக்கு" என்கிறார் அபி.