
பழம்பெரும் ஹிந்தி நடிகை நந்தா, மும்பையில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 75.
மும்பை அந்தேரியில் உள்ள தனது இல்லத்தில் நந்தா செவ்வாய்க்கிழமை காலை இருந்தபோது, அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவரது உயிர் பிரிந்தது.
மராத்தி நடிகர் மற்றும் இயக்குநரான விநாயக் தாமோதர் கர்நாடகிக்கு கடந்த 1939ஆம் ஆண்டு பிறந்த நந்தா, பின்னர் 1950ஆம் ஆண்டுகளின்போது குழந்தை நட்சத்திரமாக திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். பின்னர் படிப்படியாக உயர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இதில் "தூஃபான் ஒளர் தியா' "ஹம் தோனோ', "இடிஃபக்', "கும்நாம்', "தீன் தேவியான்', "தி டிரெய்ன்', "மந்திர்' உள்ளிட்ட படங்கள் நந்தாவுக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தன.
"அமர் அக்பர் அந்தோனி' படத்தின் (ஹிந்திப் படம்) இயக்குநர் மன்மோகன் தேசாய்க்கும், நந்தாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தேசாய் திடீரென இறந்தார். இதனால் கடைசி வரை நந்தா திருமணம் செய்து கொள்ளாமல், மும்பை அந்தேரியில் தனியே வசித்து வந்தார்.