
தன்ஷிகா பிக்சர்ஸ் ஆம்பூர் ஜே.நேதாஜி வழங்க, எம்.ஜி.வேலுமணி, சி.கணேஷ், ஜி.எஸ்.சரவண பாபு, ஜே. லோகநாதன், சி.சௌந்தர்ராஜன் இணைந்து தயாரிக்கும் படம் ‘எண்ணம் புது வண்ணம்’.
ராகவன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர், இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பெங்களூரைச் சேர்ந்த விவேக் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ‘அருந்ததி, அந்நியன்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் ‘பாசக்கார நண்பன்’ படத்தின் நாயகியாகவும் நடித்த திவ்யா நாகேஷ் இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, ‘நான் கடவுள்’ பாரதி, முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஜே.நேதாஜி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
‘சேரன் பாண்டியன், சிந்துநதிப் பூ’ போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த சௌந்தர்யன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்திரமுகி, ஒக்குடு படங்களின் ஒளிப்பதிவாளரான சேகர் வி ஜேஸப்பின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படம் பற்றி இயக்குனர் கூறும் போது, பிறக்கிற எல்லா உயிருக்கும் ஒரு அன்பு தேவை.
அந்த அன்பு கிடைக்காத போது, அது அவங்களோட தலையெழுத்து, தலை விதின்னு சமூகம் பொறுப்பில்லாமல் தட்டிக் கழிச்சால் அவங்களாலேயே நம்மளோட பாதுகாப்பான வாழ்க்கை பறி போயிடும். அதை மையமா வச்சி இந்த படத்தை எடுத்திருக்கோம் என்றார். வேலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஆம்பூர், வேலூர், ஏலகிரி போன்ற இடங்களில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வருகிறது.