
அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்தது. இதில், நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை நடிகர் கமல்ஹாசனுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இது குறித்து கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிகையில் தெரிவித்திருப்பதாவது,
”குடியரசுத்தலைவர் மாளிகையின் சரித்திர அழுத்தமும் என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவை கற்றுத் தந்தது. இத்தகைய விழாக்களை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது.
எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டும் அல்ல, என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டும் ஒரு முறை குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன்.
தேசிய கீதம் இசைத்த போது மனது ஏனோ நெகிழ்ந்து நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதை உணர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேச பக்தியுள்ள என் தாய், தந்தையரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது.
ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன். மேலும் பல்துறை வித்தகர்களுடன் தோள் உரசி நின்றதில் பெருமை கொள்கிறேன்.
இன்னும் இப்பெருமையைப் பெறப் போகிறவர்களையும், பெறாவிட்டாலும் தன் கடமையைச் செய்யப் போகும் இந்தியர்களையும் என் மனம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கியது ” என அந்த அறிகையில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.